
கோலாலம்பூர், மார்ச்-16 – 2023-ஆம் ஆண்டில் சுமார் 70.6 விழுக்காட்டு மலேசியர்கள் e-commerce எனப்படும் மின் வணிகத் தளங்கள் வாயிலாக பொருட்களையும் சேவைகளையும் வாங்கியுள்ளனர்.
முந்தைய ஆண்டை விட இது 0.2 விழுக்காடு அதிகமென, மலேசியப் புள்ளிவிவரத் துறை கூறியது.
தனிநபர் மற்றும் குடும்பங்களின் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பில் தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் அது தெரிய வந்ததாக, நாட்டின் தலைமைப் புள்ளியியலாளர் டத்தோ ஸ்ரீ Dr மொஹமட் உசிர் மஹிடின் (Mohd Uzir Mahidin) தெரிவித்தார்.
அதிகப்படியான அந்த மின் வணிக ஷாப்பிங் போக்கு, தொடர்ச்சியான அதாவது 97.7 விழுக்காட்டிலிருந்த இணையப் பயன்பாட்டால் உந்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
இவ்வேளையில், அதே 2023-ஆம் ஆண்டில் 78, 236 நிறுவனங்கள் e-commerce தளங்களில் பரிவர்த்தனைகளை நடத்தியுள்ளன.
மின் வணிகப் பரிவர்த்தனைகளின் வாயிலாக கிடைத்த வருமானம் என்ற ரீதியாகப் பார்த்தால், 2022-ல் 1.12 ட்ரில்லியன் ரிங்கிட் வசூலை மலேசியா ஈட்டியுள்ளது.
இதுவே 2015ல் அவ்வெண்ணிக்கை வெறும் 398.2 பில்லியன் ரிங்கிட்டாக மட்டுமே இருந்ததாக அவர் சொன்னார்.