கோலாலம்பூர், டிசம்பர்-27 – அடுத்தாண்டு ஜூலை முதல் தீபகற்ப மலேசியாவில் அடிப்படை மின்சாரக் கட்டணத்தை 14.2 விழுக்காடு உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
புதியக் கட்டண விகித பரிந்துரை அட்டவணையின் படி, ஒரு கிலோ வாட் மணி மின்சாரம் 45.62 சென்னாகும்.
2025 ஜனவரி முதல் 2027 டிசம்பர் வரையில் மூன்றாண்டு காலத்திற்கு அது அமுலில் இருக்கும்.
என்றாலும், அடுத்தாண்டின் முதல் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டண விகிதத்திலும் அமைப்பிலும் மாற்றமிருக்காது என பங்குச் சந்தைக்கு வழங்கிய அறிக்கையில் TNB குறிப்பிட்டது.
அதாவது, புதியக் கட்டண விகிதத்துடன் தங்களைப் பழக்கிக் கொள்ள பயனீட்டாளர்களுக்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.
2025 ஜனவரி முதல் ஜூன் வரை கட்டண விகிதத்தில் நிலவும் வேறுபாடுகளை, Kumpulan Wang Industri Elektrik ஏற்றுக் கொள்ளுமென TNB விளக்கியது.
2022 – 2024 வரையிலான நடப்புக் காலக்கட்டத்திற்கு அடிப்படை மின்சாரக் கட்டண விகிதம் ஒரு கிலோ வாட் மணிக்கு 39.95 சென்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அவ்விகிதம் 2014-லிருந்து அமுலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.