
கோலாலும்பூர், ஜூன் 30 – மலாயா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க கிளப் ஹவுஸில், மலர்ந்த நினைவுகளுடன் 1995ஆம் ஆண்டில் மலாயா பல்கலைகழகத்தில் பயின்ற இந்திய மாணவர்களின் ஒன்றுக்கூடல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை இனிதே நடைபெற்றது.
இந்த ஒன்றுக்கூடல் நிகழ்வில், சுமார் 65 பேர் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலுமிருந்து வந்து கலந்துக்கொண்டது நிகழ்விற்கு மேலும் சிறப்பு சேர்த்தது.
மலாயா பல்கலைகழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்றாய் படித்து அளவளாவிய இவர்கள் அனைவரும், மீண்டும் சந்தித்து தங்களின் கடந்த கால நினைவுகளையும் உணர்வுகளையும் இந்நிகழ்வின் வாயிலாக ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டது இவ்விழாவின் முத்தாய்ப்பாக அமைந்தது.
தோற்றங்கள் மாறியிருந்தாலும், கால சூழல்கள் அவர்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த ஒன்றுகூடல் நிகழ்வு, அவர்களுக்கு மிக பெரிய ‘நெட்ஒர்க்’ (network) தளமாக அமைந்ததோடு அவரவரின் தற்போதைய முன்னேற்றங்கள், தற்போதைய வாழ்க்கை சூழல்கள் மற்றும் வருங்காலத்தில் ஒருவருக்கொருவர் உதவக்கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்துள்ளது.
இதனிடையே இந்நிகழ்வை சிறப்புற ஏற்பாடு செய்த மலாயா பல்கலைகழக முன்னாள் மாணவர் சங்க ஏற்பட்டு குழுவினருக்கு, 95ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்கள் நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர்.