
புத்ராஜெயா, ஜூன்-6 – ஆண்டுக்கு 500,000 ரிங்கிட்டுக்கும் கீழ் வருமானமீட்டும் நிறுவனங்களுக்கு e-invoice முறை அமுலாக்கத்திலிருந்து தற்போதைக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
அதே சமயம் 1 மில்லியன் முதல் 5 மில்லியன் ரிங்கிட் வரையில் வருமானம் பெறும் வர்த்தகங்களுக்கு, அடுத்தாண்டு ஜனவரி 1 வரை இத்திட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக உள்நாட்டு வருவாய் வாரியமான LHDN அறிவித்துள்ளது.
இவ்வேளையில் 1 மில்லியன் வரையில் வருமானமீட்டும் நிறுவனங்கள் 2026 ஜூலை 1 முதல் இந்த e-invoice முறையை பயன்படுத்தியாக வேண்டும்.
குறிப்பாக குறு, சிறு, நடுத்தர வியாபாரிகளுக்கு இருக்கும் மாதாந்திர கடப்பாடுகளைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக LHDN விளக்கியது.
இப்புதிய முறைக்கு பழக்கப்படுத்திக் கொள்ள அவர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென அது கூறியது.
எனினும், 5 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 25 மில்லியன் ரிங்கிட் வரையில் ஆண்டு வருமானம் பெறும் நிறுவனங்கள், வரும் ஜூலை 1 முதல் e-invoice முறையைப் பயன்படுத்தும்.
மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 6 மாத தளர்வு தொடருகிறது.
இக்காலக் கட்டத்தில், e-invoice விதிமுறைகளைப் பின்பற்றும் பட்சத்தில்,1967 வருமான வரி சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என்றும் LHDN உத்தரவாதம் அளித்தது.
ஆனால் அடுத்தாண்டு ஜனவரி 1 முதல் 10,000 ரிங்கிட்டுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் நிறுவனங்கள் கட்டாயம் e-invoice வெளியிட வேண்டும்.