தாய்லாந்தில் வரலாறு: ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டத்திற்கு அந்நாட்டு மன்னர் ஒப்புதல்

பேங்கோக், செப்டம்பர்-25 – தாய்லாந்தில் ஒரே பாலினத்தவர் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்கும் புதியச் சட்டத்திற்கு, அந்நாட்டு மன்னர் மகா வஜிரலங்கோன் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார்.
இதையடுத்து அரசிதழலில் வெளியிடப்பட்ட 120 நாட்களில் அச்சட்டம் அமுலுக்கு வரும்.
சட்ட மசோதா ஜூன் மாதமே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால், தாய்லாந்தில் ஒரே பாலினத்தவரின் சட்டப்பூர்வமான முதல் திருமணம் வரும் ஜனவரியில் நடைபெறலாம்.
இந்த வரலாற்றுப்பூர்வ நிகழ்வை அடுத்து, ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரித்த முதல் தென்கிழக்காசிய நாடு என்ற பெருமையைத் தாய்லாந்து பெறுகிறது.
அதே சமயம், தைவான், நேப்பாளம் ஆகியவற்றுக்கு அடுத்து ஒரே பாலினத் திருமணத்தை ஏற்கும் மூன்றாவது ஆசிய நாடாக தாய்லாந்து பெயர் பதித்துள்ளது.
ஒரே பாலினத் திருமணம் செய்து கொள்வோர் குழந்தைகளைத் தத்தெடுக்கவும் அனுமதிக்கப்படுகின்றனர்.