
ஜோகூர் பாரு, டிசம்பர்-6 – தாய்லாந்து, சொங்க்லாவில் ஆதரவற்றப் பிள்ளைகளுக்கு தாஃபிஸ் (Tafiz) பள்ளிகளைக் கட்டுவதற்காக எனக் கூறி, பொது மக்களிடம் நன்கொடைத் திரட்டும் கும்பலைச் சேர்ந்த இருவர், ஜோகூரில் கைதாகியுள்ளனர்.
வெளிநாட்டு சகோதரர்களான 54 மற்றும் 47 வயது அவ்வாடவர்கள், உலு திராம், தாமான் திராம் பாருவில், அக்கும்பல் தங்கியிருந்த வீட்டில் கைதுச் செய்யப்பட்டனர்.
அதே வீட்டிலிருந்து ஓர் உள்ளூர் ஆடவரும், 5 வெளிநாட்டு ஆடவர்களும் மீட்கப்பட்டனர்.
20 முதல் 70 வயதிலான அவர்கள், நன்கொடைத் திரட்ட கட்டாயப்படுத்தப்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.
ஜோகூர் பாரு, ஸ்ரீ ஆலாம், கூலாய், ஆயர் ஹீத்தாம், சிம்பாங் ரெங்கம் போன்ற இடங்களைக் குறி வைத்து 2019-ஆம் ஆண்டிலிருந்து அக்கும்பல் செயல்பட்டு வந்துள்ளது.
அந்த நன்கொடை திரட்டும் மோசடி கும்பலின் மூளையாகச் செயல்பட்டதாக நம்பப்படும் அண்ணன் தம்பி இருவரும் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் கண்டறியப்பட்டதாக, ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் கூறினார்.
2 கார்கள், 6 நன்கொடை உண்டியல்கள், JAKIM-மின் letterhead பொறிக்கப்பட்ட நன்கொடைத் திரட்டலுக்கான போலி அனுமதிக் கடிதம் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
தவிர, கட்டுமானத்திலுள்ள ஒரு பள்ளிவாசலின் புகைப்படங்கள், நன்கொடைக்கான இரசீதுகள், 9,158 ரிங்கிட் ரொக்கம் உள்ளிட்டவையும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன.
இருவரும் விசாரணைக்காக 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.