
அம்பாங், டிசம்பர்-7, சிலாங்கூர், அம்பாங் ஜெயா, தாமான் டாகாங், PKNS அடுக்குமாடி குடியிருப்பில் குடிநுழைவுத் துறை நேற்று முன்தினம் நடத்திய அதிரச் சோதனையில், 93 கள்ளக்குடியேறிகள் கைதாகினர்.
4 மாதக் குழந்தை முதல் 55 வயது வரையிலான அவர்கள், இந்தோனீசியா, வங்காளதேசம், மியன்மார், நேப்பாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அப்பகுதியில் கள்ளக்குடியேறிகளின் நடமாட்டம் இருப்பதாக பொது மக்கள் கொடுத்த புகாரை அடுத்து, மொத்தமாக 189 வெளிநாட்டவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக, அதன் தலைமை இயக்குநர் டத்தோ ச’க்காரியா ஷாபான் (Datuk Zakaria Shaaban) கூறினார்.
அதிகாரிகளைக் கண்டதும் சில கள்ளக்குடியேறிகள் ஓடி ஒளியப் பார்த்தனர்; எனினும் அவர்களின் முயற்சி பலிக்கவில்லை.
குடிநுழைவுச் சட்டம் மற்றும் கடப்பிதழ் சட்ட மீறல் தொடர்பில், கைதான அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.