
கோலாலம்பூர், மார்ச்-15 – தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சிலுக்கு எதிராக, முன்னாள் ஆசிரியர் ஒருவர் facebook-கில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவேற்றியிருப்பது வைரலாகியுள்ளது.
இஸ்லாம் – இந்து மதங்கள் இழிவுப்படுத்தப்பட்ட அண்மையச் சம்பவங்களில் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ஒப்பீடு செய்து, ஃபாஹ்மியை அவ்வாசிரியர் கடுமையாக விமர்சித்தார்.
ஃபாஹ்மியும் மடானி அரசாங்கமும் இஸ்லாத்தையும் நபிகள் நாயகத்தையும் மதிக்கவில்லை; மாறாக சிறுமைப்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் அந்த ஆசிரியரின் பதிவையும் அவரின் ஒப்பீடையும் இஸ்லாமிய ஆய்வியல் விரிவுரையாளரான Dr Abu Hafiz Salleh Hudin சாடியுள்ளார்.
நிதர்சனம் புரியாமல் தவறான ஒப்பீட்டைச் செய்துள்ளதோடு, ஃபாஹ்மி மீதும் அரசாங்கத்தின் மீதும் அந்த ஆசிரியர் அவதூறாக பேசியுள்ளார்.
இது நிந்தனைக்குரியது என Dr Abu Hafiz சுட்டிக் காட்டினார்.
இந்துக்களின் ‘வேல் வேல்’ வீடியோ சர்ச்சையில் ஏரா எஃ.எம் வானொலிக்கு மட்டும் 250,000 ரிங்கிட் அபராதம்; ஆனால் ‘அல்லாஹ்’ வாசகம் பொறிக்கப்பட்ட காலுறையின் மூலம் இஸ்லாத்தை அவமதித்த KK Mart நிறுவனத்துக்கு வெறும் 60,000 ரிங்கிட் அபராதமா என்பதே அவரின் வாதம்.
ஆனால் KK Mart விஷயத்தில் அபராதம் விதித்தது நீதிமன்றம்; அதற்கு ஃபாஹ்மியும் அரசாங்கமும் எப்படி பொறுப்பாக முடியுமென Dr Abu Hafiz கேள்வி எழுப்பினார்.
அதே சமயம் இஸ்லாத்தை அவமதித்த சம்பவத்தில் நகைச்சுவையாளர் ஹரித் இஸ்கண்டார் மற்றும் செசிலியா யாப் இருவருக்கும் தலா 10,000 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது ; அது 1998-ஆம் ஆண்டு தொடர்பு – பல்லூடகச் சட்டத் திருத்தத்திற்கு முந்தையதாகும்.
ஆகவே நியாயமற்ற ஒப்பீட்டின் மூலம் அதுவும் புனித இரமான் மாதத்தில் இப்படி அவதூறுகளை அள்ளி வீசுவது நல்லதல்ல என அந்த ஆசிரியருக்கு நினைவுறுத்த விரும்புகிறேன் என Dr Abu Hafiz சொன்னார்.