
பெடோங், ஏப்ரல்-16 – ‘AIMST நமது தேர்வு’ பிரச்சார இயக்கத்தின் மற்றுமொரு பகுதியாக ம.இ.கா புத்ரா புத்ரி பிரிவுகள் ஏற்பாட்டில் நாடளாவிய நிலையில் 700 மாணவர்கள் அண்மையில் கெடா, AIMST பல்கலைக்கழகத்திற்கு இலவச சுற்றுலா மேற்கொண்டனர்.
SPM, STPM, foundation முடித்த மாணவர்களோடு, நான்காம் ஐந்தாம் படிவ மாணவர்களும் இதில் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.
20 பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட மாணவர்களுக்கு AIMST வழங்கும் பட்டய மற்றும் பட்டப்படிப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
அறிவியல், மருத்துவம், மருந்தகம், பொறியியல் உள்ளிட்ட 11 கல்விப் புலங்களும் அவர்களுக்கு சுற்றிக் காட்டப்பட்டன.
மருத்துவராவது எப்படி, மருந்தகப் பட்டப்படிப்பு எப்படி இருக்கும், கணினி அறிவியல் துறையில் சிறந்து விளங்க என்ன தேவை என்பது உள்ளிட்டவை குறித்தும் செய்முறையோடு விளக்கப்பட்டன.
ஒவ்வொரு கல்விப் புலத்திலும் இருக்கும் வசதிகளைக் கண்டு மாணவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
மிகச் சிறந்த தேர்ச்சியுடன் வரும் மாணவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் வழங்கப்படுவது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மறைந்த துன் சாமிவேலு தலைமையில் AIMST பல்கலைக்கழக உருவாக்கம் தொடங்கி அதன் சிறப்புகள் வரை, துணை வேந்தரும் தலைமை செயலதிகாரியுமான பேராசிரியர் Dr கதிரேசன் வி.சதாசிவம் விளக்கினார்.
இதனிடையே, இந்திய மாணவர்களின் வாழ்க்கையில் AIMST எப்படி ஒளியேற்றியது என்பது குறித்து, ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் எல். சிவ சுப்ரமணியமும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
கஷ்டப்பட்டு படித்தால் வாழ்க்கையில் எப்படி முன்னேறலாம் என, தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து மாணவர்களுக்கு உற்சாகமூட்டினார் ம.இ.கா புத்ரா பிரிவுத் தலைவர் Dr ஷத்தேஷ் குமார் (Dr.Shatesh Kumar).
நமது சுய வாழ்க்கை தொடங்கி, உலகளவில் மாற்றங்களைக் கொண்டு வர கல்வி என்பது மிகப்பெரிய கருவி.
இதனை என்றுமே முன்னிறுத்தி ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் நமது இந்திய மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதோடு மட்டுமல்லாமல் பெற்றோர்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் உபகாரச் சம்பளம் மற்றும் கல்வி கடனுதவிகளை கடந்த பல வருடங்களாக வழங்கி வருகிறது.
இந்த வாய்ப்புகளையும் கெடாவில் அமைந்துள்ள பிரமாண்ட பல்கலைக்கழக வளாகத்தையும் நேரடியாக கண்டு உணர்ந்துக் கொள்ளும் வகையில் இந்த ஒரு நாள் இலவச கல்விச் சுற்றுலா அமைந்தது குறிப்பிடத்தக்கது.