
கோலாலம்பூர், மே 15 – பதிவு செய்யப்படாத பல் கிளினிக்கை கடந்த டிசம்பரில் திறந்ததாக சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. நீதிபதி காமில் நிஜாம் முன்னிலையில் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை 21 வயதான நூர் ஹஃபிசா ஹருன்,( Nur Hafizah Harun) மறுத்தார்.
1988 ஆம் ஆண்டின் தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் சட்டத்தின் 27 ஆவது பிரிவின் கீழ் முதல் குற்றச்சாட்டும் பதிவுசெய்யப்பட்ட பல் மருத்துவராக இல்லாமல் பல் மருத்துவம் பயிற்சி செய்ததற்காக 2018ஆம் ஆண்டின் பல் மருத்துவச் சட்டம் கீழ் இரண்டாவது குற்றச்சாட்டும் Nur Hafizah மீது கொண்டுவரப்பட்டது.
டிசம்பர் 6 ஆம்தேதி இரவு மணி 8.50 அளவில் சிரம்பான் , தாமான் நுசா இன்டானில் உள்ள ஒரு வளாகத்தில் இந்தக் குற்றங்களை புரிந்ததாக நூர் அபிசா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 300,000 ரிங்கிட்டிற்கு மேற்போகாமல் அபராதம் அல்லது ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் ஒரு நபர் உத்தரவாதத்துடன் 6,000 ரிங்கிட் ஜாமீன் அனுமதித்த நீதிமன்றம், அரசு தரப்பு சாட்சிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என்ற கூடுதல் நிபந்தனைகளுடன், வழக்கை ஜூன் 12 ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்தது.