Latestமலேசியா

தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்காக முருகேசு சுழல் கிண்ண தேசிய நிலையிலான காற்பந்துப் போட்டி; ஜூன் 1இல் பாகோ UTHMமில் நடைபெறும்

பாகோ, மே 28 – ஜோகூர் மாநில முன்னாள் காற்பந்து விளையாட்டாளர் எம்.முருகேசு சுழல் கிண்ணத்திற்கான 9 பேர் கலந்துகொள்ளும் தமிழ்பள்ளி மாணவர்களுக்கான தேசிய நிலையிலான காற்பந்து போட்டி எதிர்வரும் ஜூன் 1ஆம்தேதி பாகோவிலுள்ள உயர்க்கல்வி மைய விளையாட்டரங்கில் UTHM ( Stadium Hub Pendidikan Tinggi ) மையத்தில் நடைபெறவிருக்கிறது.

இப்போட்டியை மலேசிய மக்கள் நல சேவை ,பொழுதுபோக்கு ,விளையாட்டு இயக்கம், மூவார் நகரான்மைக் கழகம் ( ZON22, Jorak), மூவார் இந்திய கலை பண்பாட்டு இயக்கம், பஞ்சோர் LANANDRON தோட்ட தமிழ்ப் பள்ளி, மூவார் 23ஆவது மைல் இந்திய சமூக மேம்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டுக்குழுவின் செயலாளர் கந்தன் சாமிநாதன் தெரிவித்தார்.

தொடர்ந்து 21 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த காற்பந்து போட்டியில் இம்முறை சிலாங்கூரிலிருந்து 4 குழுக்களும், நெகிரி செம்பிலானிலிருந்து 4 அணிகளும், மலாக்காவிலிருந்து 3 குழுக்களும் இதர 11 குழுக்கள் ஜோகூர் மாநிலத்தை பிரதிநிதித்தும் கலந்து கொள்கின்றன.

இப்போட்டியில் பங்கேற்கும் 24 குழுக்களும் ஆறு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பெறும் குழுக்கள் இரண்டாவது சுற்றுக்கு தேர்வு பெறும்.

இப்போட்டியில் முதல் இடத்தில் வெற்றி பெறும் குழுவுக்கு முருகேசு சுழல் கிண்ணமும், ரொக்கப் பரிசாக ஆயிரம் ரிங்கிட், மற்றும் குழுவில் இடம் பெற்றுள்ள ரிசர்வ் ஆட்டக்காரர்கள் உட்பட அனைத்து 13 ஆட்டக்காரர்களுக்கும் கிண்ணம் வழங்கப்படும்.

இரண்டாவது இடத்தை பெறும் குழுவுக்கு சுழல் கிண்ணமும் 700 ரிங்கிட்டும், அனைது விளையாட்டாளர்களுக்கு கிண்ணமும் வழங்கப்படும்.

மூன்றாவது இடத்தை பெறும் குழுவுக்கும், நான்காவது இடத்தை பெறும் குழுவுக்கும் தலா 500 ரிங்கிட் ரொக்கமும் விளையாட்டாளர்களுக்கு கிண்ணமும் வழங்கப்படும்.

இதுதவிர கலந்துகொள்ளும் 24 குழுக்களைச் சேர்ந்த அனைத்து ஆட்டக்காரர்களுக்கும் பதக்கங்களும் வழங்கப்படும் என கந்தன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!