
கோலாலம்பூர், பிப்ரவரி-27 – கிள்ளானில் பண்டார் உத்தாமாவையும் ஜோஹான் செத்தியாவையும் இணைக்கும் LRT 3 இலகு இரயில், வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி சேவையைத் தொடங்கும்.
அதன் கட்டுமானம் தற்போது 98.16 விழுக்காடு பூர்த்தியடைந்திருப்பதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் மக்களவையில் தெரிவித்தார்.
கட்டுமானம் ஜூலை 31-ஆம் தேதி முழுமைப் பெற்றதும், அதன் மேலாண்மை, தேசிய வசதிக் கட்டமைப்பு நிறுவனமான PRASARANA-விடம் ஒப்படைக்கப்படுமென்றார் அவர்.
மொத்தம் 37.8 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த LRT 3 சேவையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பயணிகள் இல்லாமல் சோதனை ஓட்டங்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.
விதிமுறை பின்பற்றல், ஆயுள், இரயில் அமைப்பின் பாதுகாப்பு மற்றும் SOP இயக்க நடைமுறைகளில் அச்சோதனை ஓட்டங்கள் கவனம் செலுத்தும்.
முதன்மைக் குத்தகைத்தாரரான Setia Utama LRT3 Sdn Bhd மேற்கொள்ளும் FFR எனப்படும் தவறில்லாத சோதனை ஓட்டத்துடன், ஏக காலத்தில் அச்சோதனை ஓட்டங்கள் நடைபெறும்.
ஏப்ரல் மத்தியில் தொடங்கி ஜூன் மாத இறுதி வரை அதாவது 75 நாட்களுக்கு அவை மேற்கொள்ளப்படும்.
FFR சோதனையின் முடிவுகளை, பாதுகாப்பு, SOP மற்றும் இரயில் அமைப்பின் உத்தரவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் தரைப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் மதிப்பீடு செய்யும் என அந்தோனி லோக் கூறினார்.
அவ்விரு சோதனை ஓட்டங்கள் முழுமைப் பெற்றதும், ஜூலை தொடங்கி சுமார் 60 நாட்களுக்கு பரீட்சார்த்த முறையில் பயணங்கள் மேற்கொள்ளப்படுமென்றார் அவர்.