
ஜோகூர் பாரு, ஜனவரி-20 – ஜோகூர் பாருவில் சாலை விபத்தை கைப்பேசியில் பதிவுச் செய்துகொண்டிருந்த பாதசாரி, கட்டுப்பாட்டை இழந்த காரால் மோதப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
சுல்தான் இஸ்கண்டார் நெடுஞ்சாலையின் 14-வது கிலோ மீட்டரில் நேற்று காலை 6.40 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
தலையில் படுகாயமடைந்த 68 வயது அம்முதியவர், சுல்தானா அமீனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் போது உயிரிழந்தார்.
ஜாலான் பிரிஸ்மாவிலிருந்து ஜோகூர் பாரு நோக்கி 40 வயது ஆடவர் ஓட்டி வந்த Perodua Alza கார், அங்கு ஏற்கனவே தடம்புரண்டு கிடந்த Honda CRV காருடன் மோதுவதைத் தவிர்க்கும் முயற்சியில் சாலைத் தடுப்பு காங்கிரீட் கல்லில் மோதியது.
கல்லில் மோதிய வேகத்தில் தடம்புரண்ட கார், அங்கு நின்று புகைப்படமெடுத்துக் கொண்டிருந்த முதியவர் மீது மோதியது விசாரணையில் கண்டறியப்பட்டது.
அந்த Perodu Alza ஓட்டுநருக்கு தலை, முகம், கை கால்களில் காயங்கள் ஏற்பட்டதாக, வட ஜோகூர் பாரு போலீஸ் கூறியது.