
கோலாலம்பூர், மார்ச் 21 – STR எனப்படும் Sumbangan Tunai Rahmah ரொக்கத் தொகையின் இரண்டாவது கட்ட தொகையை சுமார் 9 மில்லியன் பேர் திங்கட்கிழமை முதல் பெறுவார்கள் என நிதியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இன்று தெரிவித்தது.
இதற்காக 1.7 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதால் தங்களது தகுதிக்கு ஏற்ப 650 ரிங்கிட்வரை இந்த ரொக்க உதவித் தொகையை மக்கள் பெறுவார்கள்.
STR தரவுத்தளத்தில் பதிவுசெய்யப்பட்ட பெறுநர்கள் தங்கள் வங்கிக் கணக்குகள் மூலமாகவோ அல்லது Bank Simpanan Nasional வங்கிக் கிளைகளில் கட்டம் கட்டமாக ரொக்கத் தொகையை பெறுவார்கள் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
நோன்பு பெருநாளுக்கு முன்னதாக அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிப்பதில் மக்களுக்கு ஆதரவவு அளிக்கும் கடப்பாட்டில் Madani அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டில் STR மற்றும் SARA ஒதுக்கீடுகளை 3 பில்லியன் ரிங்கிட் அல்லது 30 விழுக்காடு அதிகரித்து 13 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவு வாழ்க்கைத் தரத்தை நியாயமாக மேம்படுத்துவதாகும் என்று நிதியமைச்சருமான அன்வார் மேலும் கூறினார்.
நிதி உதவியிலிருந்து அதிக தகுதியுள்ள மலேசியர்கள் பயனடைவதை உறுதி செய்வதற்காக STR 2025 க்கு ஆண்டு முழுவதும் பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
STR தரவுத்தளத்தில் பட்டியலிடப்படாத மலேசியர்கள் தகுதி அளவுகோல்களின் அடிப்படையில் சரிபார்ப்புக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.