புத்ராஜெயா, ஜனவரி-9 – Kemas எனப்படும் சமூக மேம்பாட்டுத் துறை நடத்தி வரும் Tabika Kemas பாலர் பள்ளிகளை, இவ்வாண்டு ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் விரிவுபடுத்த அரசாங்கம் முடிவுச் செய்துள்ளது.
கல்வி வாய்ப்புகளில், சிறப்பு கவனிப்புத் தேவைப்படும் குழந்தைகளையும் அரவணைத்துச் செல்லும் Kemas-சின் நோக்கத்திற்கு ஏற்ப அது அமைவதாக துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
தொடக்கக் கட்டமாக மலாக்காவில் அந்த Tabika Autistik பாலர் பள்ளிகள் இவ்வாண்டு செயல்படத் தொடங்கும்.
இதன் வழி நாட்டிலேயே ஆட்டிசம் குழந்தைகளுக்கு அரசாங்கம் நடத்தும் முதல் பாலர் பள்ளியாக அது விளங்கும்.
பிறகு நாடு முழுவதும் அது விரிவுப்படுத்தப்பட வேண்டுமென்பதே தமது விருப்பமென, புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சருமான அவர் சொன்னார்.
வரும் காலங்களில் ஆக்கப்பூர்வமான அடைவுநிலையைப் பதிவுச் செய்யும் kemas-சின் 5 முன்னெடுப்புகளில் இதுவும் ஒன்றென அவர் சொன்னார்.
டிஜிட்டல் உருமாற்றத் திட்டம், TVET எனப்படும் தொழில்பயிற்சி மற்றும் தொழில்கல்வி, கிராம மக்களை தொழில்முனைவோராக்கி பொருளாதார நிலையை வலுப்படுத்துதல், Kemas நிர்வாகத்தை சீர்படுத்துதல் ஆகியவை ஏனைய முன்னெடுப்புகளாகும்.