
செப்பாங், மே-15 – போலி ஆவணங்களுடன் இந்நாட்டுக்குள் நுழைய 64 வெளிநாட்டவர்கள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
செப்பாங், KLIA விமான நிலையத்தில் AKPS எனப்படும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் இன்று மேற்கொண்ட சோதனையின் போது அவர்கள் சிக்கினர்.
அவர்களில் 57 பேர் வங்காளதேச ஆண்கள், 5 பேர் இந்திய நாட்டு ஆடவர்கள், 2 பேர் பாகிஸ்தானிய ஆண்கள் ஆவர்.
பல்வேறு நாடுகளிலிருந்து வந்திறங்கிய 330 பேரிடம் ஒரு குத்து மதிப்பாக சோதனை நடத்தப்பட்டது.
அதன் போது நேரடியாக சோதனைச் சாவடிக்கு செல்லாமல் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிக் கொண்டிருந்தவர்கள் குறிவைக்கப்பட்டனர்.
கடைசியில் அந்த 64 பேருக்கு மலேசியாவுக்குள் நுழையும் தகுதியில்லை என்பது தெரியவந்தது.
அவர்களில் சிலர், இல்லாத ஒரு ஹோட்டல் முன்பதிவு, போலி இரு வழி பயண டிக்கெட் போன்றவற்றைப் பயன்படுத்தி, அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவ பார்த்தனர்.
உடனடியாகத் தடுத்து வைக்கப்பட்ட 64 பேரும், தத்தம் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.