
பத்து பஹாட், மே-2, இரட்டிப்பு இலாபத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையில், இல்லாத ஓர் அனைத்துலக முதலீட்டுத் திட்டத்தை நம்பி 300,000 ரிங்கிட் மோசம் போயுள்ளார் ஜோகூர், பத்து பஹாட்டைச் சேர்ந்த ஓர் ஆடவர்.
57 வயது அந்நபர், ஹோங் கோங் முதலீட்டுத் திட்டம் எனக் கூறி கடந்த ஜனவரியில் வாட்சப் வாயிலாக வந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்துள்ளார்.
கவர்ச்சிகரமான இலாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டதால், ஆர்வ மிகுதியில் சந்தேக நபரைத் தொடர்புகொண்டு தகவல் கேட்டுள்ளார்.
பின்னர் பிப்ரவரி 19 முதல் மார்ச் 18 வரையிலான காலக்கட்டத்தில் 2 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 2 தடவையாக மொத்தம் 330,400 ரிங்கிட்டை அவர் மாற்றினார்.
ஆனால் சொல்லியபடி இலாபத் தொகை வரவில்லை.
மாறாக மேலும் பணம் கட்டினால் கூடுதல் இலாபம் பார்க்கலாமென அவரிடம் கூறப்பட்டுள்ளது.
அப்போது தான் அவருக்கு சந்தேகம் வந்து போலீஸில் புகார் செய்தார்.
மோசடி தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420-ஆவது சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுவதாக, பத்து பஹாட் போலீஸ் கூறியது.