தோக்யோ, டிச 18 – பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் நெருக்கடிக்கு அமைதியான தீர்வைக் காண்பதற்கு உலக சமூகத்துடன் சேர்ந்து ஜப்பானும் ஆசியானும் இணைந்து குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றமுடியும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
டிசம்பர் 12-ஆம் தேதி ஐ.நா பொதுப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக அனைத்து ஆசியான் உறுப்பு நாடுகளும் ஜப்பானும் வாக்களித்திருப்பதாக அவர் கூறினார்.
மனிதாபிமான உதவி பொருட்கள் சென்றடைவது மற்றும் பிணையாளிகளின் விடுதலையை உறுதிப்படுத்துவதற்காக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன தரப்புக்குமிடையே போர் நிறுத்தம் காணப்பட வேண்டும் என ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அன்வார் சுட்டிக்காட்டினார்.
காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலால் ஏற்பட்ட அழிவு இரண்டாவது உலகப் போரின்போது ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்டதற்கு நிகராக அமைந்துள்ளதாக அன்வார் நினைவுபடுத்தினார்.
ஆசியான் – ஜப்பான் நட்புறவுகளின் மறுஆய்வு என்ற கருப்பொருளில் தோக்யோவில் ஆசியான் – ஜப்பான் 50-ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றியபோது அன்வார் இதனை தெரிவித்தார்.