
கோலாலம்பூர், ஜன 7 – ஜோகூரில் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் தொடர்பான உடன்பாடு குறித்து மலேசியாவும் சிங்கப்பூரும் அறிவித்துள்ளன. முதலீட்டை ஆதரிப்பதுடன் இரு நாடுகளுக்கிடையே பொருட்கள் மற்றும் மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தை இந்த உடன்பாடு கொண்டுள்ளது.
ஒரு ஆண்டுக்கு முன் பொருளாதார மண்டலத்தை கூட்டாக மேம்படுத்துவதற்கு இந்த இரு அண்டை நாடுகளும் முதலில் கொள்கையளவில் ஒப்புக்கொண்டன.
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) மற்றும் அவரது மூத்த அமைச்சரவை உறுப்பினர்களின் மலேசியப் பயணத்தின் போது இன்று இந்த உடன்பாடு குறித்து அறிவிக்கப்பட்டது.
உற்பத்தி, தளவாடங்கள் முதல் சுற்றுலா மற்றும் எரிசக்தி மாற்றம் வரையிலான துறைகளில் அதிக மதிப்புள்ள முதலீடுகளை ஈர்ப்பதை இரு நாடுகளும் இலக்காகக் கொண்டுள்ளன என்று பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி ( Rafizi Ramli ) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பொருளாதார மண்டலத்தில் தொடங்கப்பட்ட முதல் ஐந்து ஆண்டுகளில் 50 திட்டங்களையும், 20,000 தொழில் திறன் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் அவர்கள் இலக்கு வைத்துள்ளனர்.
மலேசியா அங்கு நிறுவ விரும்பும் நிறுவனங்களை ஆதரிப்பதற்காக ஒரு உள்கட்டமைப்பு நிதியை அமைத்து நிர்வகிக்கும், அதே நேரத்தில் சிங்கப்பூர் தனது சொந்த நிதியை உருவாக்கி முதலீடுகளை எளிதாக்கும் மற்றும் ஜோகூரில் செயல்படும் சிங்கப்பூர் நிறுவனங்களை ஆதரிக்கும் என ரபிசி தெரிவித்தார்.