
திருப்பதி, ஜூன்-9 – திருப்பதி லட்டு தயாரிப்பில் மாடு மற்றும் பன்றிக் கொழுப்புக் கலக்கப்பட்டதாக ஓராண்டுக்கு முன் வெடித்த சர்ச்சையில் புதியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
லட்டுகளில் கலக்கப்பட்டது நெய்யே அல்ல…
உண்மையான நெய்க்கு பதிலாக செம்பனை எண்ணெய் மற்றும் இரசாயனம் கலந்து போலி நெய் தயாரித்து அதை வேறு வகையில் திருப்பதிக்கு விநியோகம் செய்திருப்பதாக, இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் துறையான CBI அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
பாலை சேகரிப்பதற்கோ, நெய் தயாரிப்பதற்கோ போதியக் கட்டமைப்பு இல்லாத உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ‘போலே பாபா’ பால் நிறுவனம், செம்பனை எண்ணெய் மற்றும் இரசாயனம் மூலம் கலப்பட நெய்யை தயாரித்துள்ளது.
நேரடியாக விநியோகம் செய்தால் உண்மை தெரிந்து விடும் எனக் கருதி, AR மற்றும் வைஷ்ணவி என்ற நிறுவனங்கள் மூலம் உண்மையான நெய் போன்று அதை விநியோகமும் செய்துள்ளனர்.
இது ஒரு பெரும் சதித் திட்டம் எனக் குறிப்பிட்ட CBI, அதற்கான ஆதாரங்களாக வாட்சப் உரையாடல்களை கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்தது.
லட்டு கலப்பட விசாரணைக்காக AR , போலே பாபா மற்றும் வைஷ்ணவி ஆகிய நிறுவனங்களின் இயக்குநர்கள் கைதாகியுள்ள நிலையில், ஜாமீன் கேட்டு ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் அவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டு CBI தாக்கல் செய்த பதில் மனுவில் தான் இந்த அதிர்ச்சித் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.