பிலடெல்பியா, டிசம்பர் 26 – அமெரிக்கா, பென்னிஸ்ல்வேனியா மாநிலத்தில், வீட்டை காலி செய்யக் கோரும் வெளியேற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டதை தொடர்ந்து, தனது இரு மகன்களை கொலை செய்த தாய் ஒருவருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
40 வயது டிரின் குயென் எனும் அப்பெண், தமக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டதை அடுத்து, நீதிமன்றம் அந்த தண்டனையை விதித்துள்ளது.
கடந்தாண்டு, மே மாதம் இரண்டாம் தேதி, வீட்டின் படுக்கையறையில், தனது ஒன்பது மற்றும் 13 வயது மகன்களை சுட்டுக் கொன்றதை, குயென் ஒப்புக் கொண்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இரு மகன்களும், நான்கு நாட்களுக்கு பின், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
ஒரு வாரத்திற்கு முன்னரே திட்டமிட்டு குயென் அந்த கொலைகளை செய்ததும் தெரிய வந்துள்ளது.
அதன் பின்னர், தனது முன்னாள் கணவரின் உறவுக்கார சிறுவனை நோக்கியும் குயென் சுட்டதாக கூறப்படுகிறது.
எனினும், குறி தவறியதால் அந்த சிறுவன் அதிஷ்டவடமாக உயிர் தப்பினான்.
அச்சம்பவத்துக்கு பின்னர், தனது சடலத்தையும், இரு பிள்ளைகளின் சடலங்களையும் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கும், ஏப்ரல் 25-ஆம் தேதி இடப்பட்ட உயில் ஒன்றை சம்பவ இடத்தில் வைத்து விட்டு, போதைப் பொருள் உட்கொண்டு தற்கொலை செய்துக் கொள்வதற்காக நியூ ஜெர்சிக்கு தப்பிச் சென்ற குயென் கைதுச் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.