ஜொகூர் பாரு, மார்ச்-13 – விவசாயிகள் ஆள்பல நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதால், அடுத்த மாதம் முதல் நாட்டின் காய்கறி உற்பத்தி 40% வரை பாதிக்கப்படலாம்.
இதனால் சந்தையில் காய்கறிகளின் விலை எக்கச்சக்கமாக எகிறக் கூடும் என மலேசியக் காய்கறிகள் பயிரிடுவோர் சம்மேளனத்தின் தலைவர் லிம் செர் க்வீ கூறியுள்ளார்.
வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் பயன்படுத்தப்படாத வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான கோட்டா ரத்துச் செய்யப்படும் என்ன அரசாங்கம் அறிவித்திருப்பதே, ஆள் பற்றாக்குறைக்கு காரணம் என்றார் அவர்.
அரசாங்கத்தின் அவ்வறிவிப்பு நாட்டின் விவசாய உற்பத்தித் துறையில் குறிப்பாக காய்கறி விளைச்சலிம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நமது காய்கறி பயிரீடு முழுக்க முழுக்க வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியிருப்பதே அதற்குக் காரணம் என லிம் செர் க்வீ சொன்னார்.
கோவிட் பெருந்தொற்று தாக்கத்தில் இருந்து நாட்டின் விவசாய உற்பத்தி இப்போது தான் மீண்டு வந்திருக்கிறது.
இந்தப் புதிய சிக்கலால், ரமலான் மாத மத்தியில் இருந்து தொழிலாளர் பற்றாக்குறை மோசமடையும் என்றார் அவர்.
காய்கறி தோட்டங்களில் வேலை செய்யும் பெரும்பாலான அந்நியத் தொழிலாளர்கள் நோன்புப் பெருநாளுக்காக நீண்ட விடுமுறையில் தத்தம் தாயகம் திரும்பி விடுவர்; அதிலும் சிலர் திரும்பி வர மாட்டார்கள் என பெரித்தா ஹரியானிடம் அவர் சுட்டிக் காட்டினார்.
எனவே தங்களின் சிரமத்தை புரிந்து கொண்டு, அந்த வெளிநாட்டு தொழிலாளர் கோட்டா விஷயத்தில் அரசாங்கம் உள்ளுர் காய்கறி பயிரீட்டுத் துறைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என லிம் செர் க்வீ கேட்டுக் கொண்டார்.