தெலுக் பஹாங், பிப்ரவரி 20 – பினாங்கு, தெலுக் பஹாங் தேசிய பூங்காவில் ஏறும் போது, ஏழு மணி நேரத்திற்கும் மேலாக தொலைந்து போன பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆடவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
37 வயது யூனஸ் ஓகாலி எனும் அந்நபர், நேற்று பின்னிரவு மணி 1.22 வாக்கில், பூங்கா நுழைவாயிலில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில், சோர்வான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவர் காணாமல் போனது தொடர்பில், நேற்று மாலை மணி 6.07 வாக்கில் அவசர அழைப்பு கிடைத்ததை, தெலுக் பஹாங் தீயணைப்பு மீட்பு நிலையத்தின் தலைவர் பைஸ் ஹெல்மி உறுதிப்படுத்தினார்.
அதனை தொடர்ந்து, அவ்வாடவர் வாட்ஸ்அல் வாயிலாக பகிர்ந்த இருப்பிடத்தின் அடிப்படையில், தேடல் பணிகள் தொடங்கப்பட்டன.
எளிதாக அடையாளம் காண ஏதுவாக, அவர் பகிர்ந்த இருப்பிடத்தை விட்டு நகர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், அடை மழைக்கு மத்தியில் அவ்வாடவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அதிகாலை மணி 4.58 வாக்கில் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சம்பந்தப்பட்ட ஆடவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன் பினாங்கிற்கு பயணமான வேளை ; நேற்று மாலை அவர் தனியாக தெலுக் பஹாங் வனப்பகுதியில் நுழைந்தது தெரிய வந்துள்ளது.