ஜொகூர் பாரு, டிசம்பர் 18 – சமூக ஊடக பிரபலம் ஒருவரின், அசெளகரியத்தை ஏற்படுத்தும் காணொளி வைரலானதை அடுத்து, பள்ளிகளில் சமூக ஊடக பிரபலங்களை உட்படுத்திய சொற்பொழிவுகள் அல்லது உரைகளை கண்காணிக்குமாறு, ஜொகூர் மாநில கல்வித் துறை பணிக்கப்பட்டுள்ளது.
அவ்விவகாரம் தொடர்பில் விவாதிக்க, மாணவர் நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுத் துறையின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ஜொகூர் கல்வி, தகவல் மற்றும் தொடர்பு ஆட்சிக் குழு உறுப்பினர் நோர்லிசா நோ தெரிவித்தார்.
அந்த சந்திப்பு நாளை நடைபெற திட்டமிடப்பட்டுள்ள வேளை; அதில் ஜொகூர் மாநிலத்திலுள்ள, 11 மாவட்ட கல்வி அலுவலகங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் எனவும் நோர்லியா சொன்னார்.
பள்ளிகளில், வைரலாகி இருக்கும் சமூக ஊடக பிரபலத்திற்கு, மாநில கல்வித் துறை உடனடியாக தடை விதிக்க வேண்டுமென கோரிய X சமூக ஊடக பயனர்களுக்கு, பதிலளிக்கும் வகையில் நோர்லியா அவ்வாறு சொன்னார்.
அச்சம்பவம் தொடர்பில் வைரலான காணொளியில், பெண் மாணவர் ஒருவர், “அன்னநடை” இட்டு ஆண் மாணவர் ஒருவரை நோக்கி வந்து அவருக்கு “flying kiss” தருகிறார். அதனை மண்டபத்திலுள்ள இதர மாணவர்கள் கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.