கோலாலம்பூர், பிப்ரவரி-28,
வெள்ளிக் கிழமை தொடங்கி இந்திய முஸ்லீம் உணவகங்களில் உணவுகள் விலையேற்றம் காணவிருப்பதாகக் கூறப்படுவதை, மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கம் (PRESMA ) மறுத்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம் கண்டிருந்தாலும், Mamak கடைகளில் எந்தவோர் உணவுப் பொருளும் விலையேற்றம் காணாது என PRESMA தலைவர் டத்தோ ஜவஹர் அலி தாயிப் உத்தரவாதம் அளித்தார்.
நாடு தழுவிய அளவில் PRESMA கீழுள்ள 12 ஆயிரம் உணவகங்களும் விலையேற்றம் இல்லை என அறிவித்து விட்டதால், பொது மக்கள் கவலைக் கொள்ள வேண்டாம் என ஜவஹர் கேட்டுக் கொண்டார்.
உணவக நடத்துநர்களே விலையேற்றம் இல்லை என அறிவித்து விட்ட பிறகு Mamak கடைகளில் உணவுகள் விலையேற்றம் காண்பதாக எங்கிருந்து புரளி கிளம்பியது என தமக்குத் தெரியவில்லை என்றார் அவர்.
“வாழ்க்கைச் செலவின உயர்வால் மக்கள் சந்திக்கும் சவால்களை நாங்கள் நன்கறிவோம். எனவே, அவர்களுக்கு மேலும் சுமையைக் கொடுக்காத வண்ணம், உணவுப் பொருட்கள் நியாயமான விலையில் விற்கப்படுவதை உறுதிச் செய்வோம்” என ஜஹவர் கூறினார்.
இந்ந நிலையில், தாங்கள் செல்லும் உணவகங்களில் விலையேற்றம் இருந்தால், அது குறித்து உரிய அதிகாரத் தரப்பிடம் புகாரளிக்குமாறு பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
உணவகத்தைத் தேர்ந்தெடுக்கும் போது, உணவகத் தூய்மை, உணவுகளின் தரம், நியாயமான விலை ஆகிய மூன்று அம்சங்களுக்கு வாடிக்கையாளர்கள் எப்போதும் முன்னுரிமைத் தர வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.
மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி, பொருள் மற்றும் சேவை வரி SST விகிதம் 6 விழுக்காட்டில் இருந்து 8 விழுக்காட்டுக்கு உயருகிறது.