
அம்பாங் , அக் 21 – வேலைக்கார பெண் ஒருவரை அவரது இரு முதலாளிகள் கை, கால்களில் காயம் ஏற்படும் வரை சுத்தியல், இரும்பு இடுக்கியால் தாக்கியதோடு இஸ்திரி பெட்டியினால் சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அந்த இந்தோனேசிய வேலைக்காரப் பெண்ணை சோம்பேறி மற்றும் அடிக்கடி வீட்டு வேலைகளை செய்வதற்கு மறந்து விடுபவர் என்று கூறி அந்த இரண்டு முதலாளிகளும் சித்ரவதை செய்துள்ளனர் என அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணைக் கமிஷனர் முகமட் அஸாம் இஸ்மாயில் ( Mohd Azam Ismail ) தெரிவித்தார். பாதிக்கப்பட்ட வேலைக்காரப் பெண் அக்டோபர் 13ஆம்தேதி போலீசில் புகார் செய்துள்ளார்.
தாம் வேலை செய்யும் வீட்டைச் சேர்ந்த 40 வயது பெண்ணும் அவரது 61 வயது தாயாரும் தம்மை சித்ரவதை செய்துள்ளதாக அப்பெண் தெரிவித்திருக்கிறார். வலது மற்றும் இடது கைகளிலும் வலது காலிலும் காயம் அடைந்த அப்பெண் பொதுமக்களின் உதவியை பெறும் பொருட்டு அந்த வீட்டிலிந்து தப்பி வந்துள்ளார். போலீஸ் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து புகார் கிடைத்த மறுநாளே சம்பந்தப்பட்ட இரண்டு சந்தேகப் பேர்வழிகள் அவர்களது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டனர். குற்றவியல் சட்டத்தின் 324 ஆவது விதியின் கீழ் அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக முகமட் அஸாம் தெரிவித்தார்.