கோலாலம்பூர், அக்டோபர்-7 – மலேசிய முஸ்லீம் உணவக நடத்துனர்கள் சங்கமான PRESMA, தனது கீழுள்ள அனைத்து உணவகங்களும் இனி சிகரெட்டை விற்க வேண்டாமென பரிந்துரைத்துள்ளது.
நாடு முழுவதுமுள்ள 12,000 உணவகங்கள் அச்சங்கத்தில் அங்கம் வகிக்கின்றன;
அவற்றில் இதுவரை 40 விழுக்காட்டுக்கும் அதிகமான உணவகங்கள் சிகரெட்டை விற்பதில்லை என PRESMA தலைவர் டத்தோ ஜவஹர் அலி தாயிப் (Datuk Jawahar Ali Taib) தெரிவித்தார்.
சிலாங்கூர் Puncak Alam-மில் சிகரெட் விற்காத உணவகத்தைப் பாராட்டி சுகாதார அமைச்சர் சான்றிதழ் வழங்கியிருப்பதை, அவர் சுட்டிக் காட்டினார்.
உணவகத் தொழிலில் இதுவொரு நல்ல எடுத்துக்காட்டாக அமையுமென்றார் அவர்.
இவ்வேளையில், அக்டோபர் முதல் தேதி தொடங்கி அமுலுக்கு வந்த சட்டம் 852 எனப்படும் பொது சுகாதாரத்திற்கான புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் குறித்த சில ஐயங்களையும் PRESMA முன் வைத்துள்ளது.
வாடிக்கையாளர்கள் புகைப்பிடித்தால் உணவக நடத்துநருக்கு அபராதம் விதிக்கப்படுமென்ற விதி ஏற்புடையதாக இல்லையென டத்தோ ஜவஹர் சொன்னார்.
புகைப்பிடிக்கக் கூடாதென்ற அறிவிப்பை மட்டும் தான் எங்களால் வைக்க முடியும்; அதற்கு மேற்பட்டு வாடிக்கையாளர்களைத் தடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை.
இப்படியொரு நிலையில், உணவங்களுக்கு அபராதம் விதிப்பது நியாயமாக இல்லை; எனவே அரசாங்கம் அதற்கு நல்ல தீர்வை வழங்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.