
புத்ராஜெயா, பிப்ரவரி-19 – கூட்டரசு பிரதேசங்களில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் பற்றிய புகார்களை இப்போது 12 மணி நேரங்களுக்குள் தீர்க்க வேண்டும்.
முன்பு இது 24 மணி நேரமாக இருந்ததாக கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஸ்தாஃபா கூறினார்.
இந்நடவடிக்கையானது, 3 கூட்டரசு பிரதேசங்களிலும், குறிப்பாக கோலாலம்பூர் சாலைகளில் குழிகள் அறவே இருக்கக் கூடாது என்ற கொள்கைக்கு ஏற்ப அமைகிறது.
சாலைப் பயனர்களின் பாதுகாப்புக்கு இது மிகவும் முக்கியமானது;
குறிப்பாக இவ்வாண்டு மலேசியா, ஆசியானின் தலைமைத்துவத்தை ஏற்பதாலும், அடுத்தாண்டு ‘மலேசியாவுக்கு வருகைத் தாருங்கள் ஆண்டு’க்குத் நாடு தயாராகி வருவதாலும், இது முக்கியத்துவம் பெறுவதாக அமைச்சர் சொன்னார்.
நகர்ப்புற பராமரிப்பு சிக்கல்களை ஆக்கப்பூர்வமாகக் கண்டறிந்து நிவர்த்தி செய்வதில், AI அதி நவீன தொழில்நுட்பத்தையும் நிகழ்நேர கண்காணிப்பையும் பயன்படுத்தலாம்;
இதன் மூலம் சம்பவ இடத்திற்கு அதிகாரத் தரப்பு விரையும் நேரங்களைக் குறைக்க முடியும் என்று சாலிஹா நம்பிக்கை தெரிவித்தார்.
இவ்வேளையில், கோலாலம்பூரில் AI அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய 5,000 CCTV கேமாராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த CCTV-கள் பொது மக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆபத்து அவசர நேரங்கள், போக்குவரத்துச் சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்களை ஆக்ககரமாகக் கண்காணித்து, விரைந்து நடவடிக்கை எடுக்க உதவுமென்றார் அவர்.
குழிகள் தொடர்பான புகார்களை மாநகரவாசிகள் Adu@KL அல்லது KL Strike Force நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் எந்தவொரு புகார் பிரிவுகள் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்.
புத்ராஜெயா கழக வளாகத்தில் உள்ள Auditorium Tun Azizan Abidin அரங்கில் CHASE CITY திட்ட மற்றும் சின்ன அறிமுக நிகழ்வின் போது Dr சாலிஹா அவ்வாறு பேசினார்.
நீடித்த மேம்பாடு, தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் மக்களின் நல்வாழ்வுக்கு முக்கியத்வம் தரும் கூட்டரசு பிரதேசத்தை உருவாக்குவதே இந்த CHASE CITY தூரநோக்குப் பார்வையாகும்.
CHASE என்ற சொல்லில் C- Clean City-யையும் H – Health City-யையும் A – Advance City-யையும் S – Safe City-யையும் E – Eco Friendly City-யையும் குறிக்கின்றன.