Latestமலேசியா

பிரிக்பீல்ட்ஸ்ட்டில் சிறுதொழில் வணிகர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கலை நிகழ்ச்சியை வேறு இடத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை

கோலாலம்பூர், அக்டோபர் 11 – தீபாவளிக் கடைகளைக் கலை நிகழ்ச்சிக்காக இடம் மாற்றம் செய்வது நியாயம் இல்லை; அதற்கு பதிலாக கலை நிகழ்ச்சியை வேறு இடத்திற்கு மாற்றுங்கள் என பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா சிறு வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு கோலாலம்பூர் மாநகர் மன்றம் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் தற்காலிகமாக 20 தீபாவளி கடைகளுக்கு அனுமதி வழங்கி, நேற்று சாலையை மூடுவதற்கும் ஒப்புதலும் வழங்கியுள்ளது.

இந்நிலையில், தீபாவளி கலை நிகழ்ச்சிக்காக அங்கு மேடை அமைக்கப்படவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால், கடந்த ஆண்டைப்போல் தங்களின் கடைகளை இடம் மாற்றப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால் தங்களின் வியாபாரம் பாதிக்கப்படும் என சிறு தொழில் வியாபாரிகள் அஞ்சுகின்றனர்.

நீரூற்றுக்கு எதிர்புறத்தில் கடைகள் வரிசையாக அமைக்கப்பட்டு, விற்பனைக்குத் தயார் செய்து வரும் நிலையில், திடீரென பாதி கடைகளை நேர் எதிராக மாற்ற வேண்டிய சூழல் நிலவி உள்ளது.

கடைகளை அமைத்த பின்னர், அந்த கடைகளை இடம்‌ மாற்றாம் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்று பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்திய சிறு வணிகர்கள் சங்கத்தின் துணை செயலாளர் குணசீலன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

தீபாவளி கலைவிழா நடத்த வேறு இடங்கள் உள்ளன.

சென்ற வருடம் நடந்த இது போன்ற கலை நிகழ்ச்சியால் தங்கள் வியாபாரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக ஆடைகள் வியாபாரம் செய்யும் அமுதாம்பாள் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.

ஆதலால், வேறு இடத்தில் மேடைகள் அமைத்து நிகழ்ச்சியை மேற்கொள்வது சிறப்பாகும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவிற்கு வருகையளித்த பிரதமரின் அரசியல் செயலாளரின் உதவி அதிகாரி ஜோனாதன் வேலா கண்டிப்பாக இச்சிக்கலுக்குத் தீர்வு காணுவதற்கு முயல்வதாகக் கூறியுள்ளார்.

பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் சிறுதொழில் வணிகர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க அரசாங்கம் கண்டிப்பாக உதவும் எனவும் ஜோனாதன் வேலா தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!