
காஜாங், பிப்ரவரி-22 – சிலாங்கூர், காஜாங், பண்டார் சுங்கை லோங்கில் கணவரால் கொல்லப்பட்டதாக நம்பப்படும் 63 வயது மூதாட்டியின் சடலம் அவர்களது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது.
படுக்கையறையில் இரத்த வெள்ளத்தில் அவர் இறந்துகிடந்ததாக, காஜாங் போலீஸ் தலைவர் துணை ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் கூறினார்.
மனைவியைக் கொன்றதும் தற்கொலை முயற்சியில் தனது மணிக்கட்டை அவ்வாடவர் அறுத்துக் கொண்டார்.
வியாழக்கிழமை மாலை நிகழ்ந்த அச்சம்பவம் குறித்து அத்தம்பதியின் மகன் போலீஸில் புகார் செய்தார்.
25 ஆண்டுகளாக அவ்வாடவர் நடத்தி வரும் வியாபாரம் நஷ்டமடைந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலே அச்சம்பவத்துக்குக் காரணம் என நம்பப்படுகிறது.
அதோடு கொல்லப்பட்ட மூதாட்டியும் ஏதோ நோயினால் அவதிப்பட்டு வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.
எனினும் கொலைக்கான உண்மைக் காரணம் தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது.
கைதான 65 வயது கணவர் விசாரணைக்காக பிப்ரவரி 27 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.