
பெய்ஜிங், ஏப்ரல்-11, அமெரிக்கப் பொருட்களுக்கான வரி விகிதத்தை 84 விழுக்காட்டிலிருந்து 125 விழுக்காடாக சீனா உயர்த்தியுள்ளது.
சீனப் பொருட்களுக்கு 145 விழுக்காட்டு வரியை விதிப்பதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்ததற்கு பதிலடியாக பெய்ஜிங் இப்புதிய அறிவிப்பை வெளியிட்டது.
அமெரிக்காவின் ‘ஒருதலைப்பட்ச கொடுமைகளை’ எதிர்க்க ஐரோப்பிய ஒன்றியம் பெய்ஜிங்குடன் கைகோர்க்க வேண்டுமென சீன அதிபர் சீ சின் பிங் பேசிய சில மணி நேரங்களில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியானது.
சனிக்கிழமை முதல் இது நடப்புக்கு வருகிறது.
இதற்கு மேலும் அமெரிக்கா வரியை உயர்த்தினால் சீனா கண்டுகொள்ளாது.
காரணம், தற்போதைய வரி விகிதத்தில், சீனாவுக்கு அமெரிக்கப் பொருட்களை ஏற்றுமதி செய்வதை சந்தை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு இல்லை என சீன நிதியமைச்சு கூறியது.
அடுத்தடுத்து உயர் வரி விகிதத்தை அறிவிப்பதன் மூலம், பொருளாதாரத்தில் எந்தவொரு நடைமுறை முக்கியத்துவமும் இல்லாத எண் விளையாட்டை அமெரிக்கா ஆடி வருகிறது.
அந்த ஆட்டம் தொடருமேயானால் அதனை இனியும் சீனா பொருட்படுத்தாது என சீன அரசாங்கத்தின் பேச்சாளர் கூறினார்.
உலகப் பொருளாதாரம் ‘கொந்தளித்தால்’ அதற்கு அமெரிக்காவே முழுப் பொறுப்பேற்க வேண்டுமன்றார் அவர்.
சீனாவைத் தவிர்த்து மற்ற 75 நாடுகளுக்கான கூடுதல் வரி விதிப்பை திடீரென 90 நாட்களுக்கு டிரம்ப் நிறுத்தி வைத்ததும், சீனா கொடுத்த அழுத்தத்தினால் தான் என அப்பேச்சாளர் கூறிக் கொண்டார்.