
கோலா தெரெங்கானு drawbridge பாலத்தில் சிலாங்கூர் கால்பந்து குழுவின் ஆதரவாளர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படும் தீப்பந்தம் எரித்த சம்பவம் குறித்து மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தெரிவித்தார்.
உள்ளூர் கால்பந்து ரசிகர்களிடையே, குறிப்பாக சிவப்பு ஜெர்சி அணிந்தவர்களிடையே அதிகரித்து வரும் குண்டர் கலாச்சாரம் மற்றும் குண்டர் கும்பல் போன்ற ஒழுக்கக்கேடான செயல்களை தாம் அங்கீகரிக்கவில்லையென சிலாங்கூர் காற்பந்து கிளப்பின் புரவலருமான அவர் கூறினார்.
கலவரத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சிலாங்கூர் காற்பந்து அணியின் ஆதரவாளர்கள், அணி பங்கேற்கும் எந்தவொரு போட்டியிலும் கலந்து கொள்ள மைதானத்திற்குள் நுழைவதைத் தடை செய்ய வேண்டும் என்று சிலாங்கூர் அரச அலுவலக முகநூல் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த தரப்பினரை போலீஸ் கண்டுபிடித்து , அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், சட்டத்தின்படி கூடியபட்ச மற்றும் பொருத்தமான தண்டனையுடன் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என சுல்தான் அறைகூவல் விடுத்தார்.
இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க சிலாங்கூர் காற்பந்து குழுவின் இதர ரசிகர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். சிலாங்கூர் குழுவின் அனைத்து ரசிகர்களும் தங்கள் சொந்த நடத்தையை எப்போதும் கட்டுப்படுத்தி, அணி மற்றும் மாநிலத்தின் நல்ல பெயரைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
முன்னதாக, இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தடுப்புக்காவல் உத்தரவைப் பெறுவதற்காக சிலாங்கூர் ஆதரவாளர்கள் என்று நம்பப்படும் 33 நபர்கள் நேற்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.



