Latestஉலகம்

அரசாங்க உதவிகளுக்கு ஏழை ஆண்களுக்குக் குடும்பக் கட்டுப்பாடு; மேற்கு ஜாவா ஆளுநர் சர்ச்சை பரிந்துரை

ஜகார்த்தா, மே-9,- இந்தோனேசியாவின், மேற்கு ஜாவாவில் சமூக உதவிகளுக்கான நிபந்தனைகளில் ஒன்றாக, ஏழை ஆண்களுக்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உணவு, மருத்துவம், கல்வி உபகாரச்சம்பளம், வீடமைப்பு உள்ளிட்டவற்றுக்கான மானியங்களும் அவ்வுதவிகளில் அடங்கும்.

மேற்கு ஜாவா ஆளுநர் டேடி முல்யாடியின் (Dedi Mulyadi) அந்த ஆலோசனை இந்தோனேசியர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏழைக் குடும்பங்களில் பிறப்பு விகிதத்தைத் குறைத்து, நீண்ட கால அடிப்படையில் அங்கு பரம ஏழைகளைக் குறைப்பதே அந்த உத்தேசப் பரிந்துரையின் நோக்கமாகும்.

குழந்தைப் பிறப்பையும் பிற்காலத்தில் அவர்களின் கல்விச் செலவையும் சமாளிக்க முடியாதவர்கள், எதற்காக அவசரப்பட்டு பெற்றோராக வேண்டுமென, ஏப்ரல் 29-ஆம் தேதியன்று டேலி பேசியது இன்னமும் பேச்சுப் பொருளாகியுள்ளது.

மதத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், கல்விமான்கள், மனித உரிமை அமைப்புகள் தொடங்கி சாமானிய மக்கள் வரை இதனால் ‘கொந்தளித்துப்’ போயுள்ளனர்.

இது ஒரு எல்லை மீறிய, மனிதாபிமானமற்ற மற்றும் மனித உரிமைக்கு எதிரான பரிந்துரையாகும் என அவர்கள் ஆளுநருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொள்ளும் ஆண்களுக்கு ஊக்கத் தொகையாக மலேசிய ரிங்கிட்டுக்கு 130 வெள்ளி வழங்கப்படும் என்றும் டேலி அறிவித்திருந்தார்.

என்றாலும் இந்தோனேசிய சமூக அமைச்சர் சைஃபுல்லா யூசோஃப், அப்பரிந்துரையை கண்டித்துள்ளார்.

அரசாங்க உதவிகள், ஒருவரின் உடல் சார்ந்த மருத்துவ நிபந்தனைகளுடன் தொடர்புப் படுத்தப்படக் கூடாது என அவர் திட்டட்டமாகக் கூறியுள்ளார்.

ஆளுநர் டேலி, அடுத்த தேர்தலுக்கு இப்போதே அரசியல் ஆதாயம் தேட ஆரம்பித்து விட்டதாக, இந்தோனேசிய வலைத்தளவாசிகளும் சாடி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!