![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-26-May-2024-04-54-PM-4501.jpg)
கோலாலம்பூர், மே 26 – நாடு முழுவதும் உள்ள இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழி ஆசிரியர்களின் கடுமையான பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய துரித நடவடிக்கை எடுக்குமாறு, தமிழ்ப்பள்ளிகள் சார்ந்த இயக்கங்களின் தலைமைக் கூட்டமைப்பு, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் கல்வி அமைச்சர் ஃபட்லீனா சிடேக் ஆகியோரின் கவனத்துக்கு இவ்விவகாரத்தைக் கொண்டுச் செல்வதாக அதன் தலைவர் வெற்றிவேலன் தெரிவித்தார்.
சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் UPSI-யிலிருந்து தகுதி பெற்ற 49 ஆசிரியர்களில் 25 பேர் கல்வியமைச்சின் நேர்காணலில் கலந்து கொண்டுள்ளனர்; ஆனால் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை.
அதோடு UPSI-யில் பட்டப்படிப்பை முடித்த 40க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கல்வியமைச்சின் நேர்காணலுக்காக காத்திருக்கின்றனர்.
நிலைமை இவ்வாரிருக்க, சிலாங்கூரில் 100க்கும் மேற்பட்ட இடைநிலைப் பள்ளிகளில் (SMK) பற்றாக்குறை கடுமையாக உள்ளது.
குறிப்பாக சுங்கை லோங் இடைநிலைப் பள்ளியின் பிரச்சனை மிகவும் தீவிரமானதாக இருப்பதால் அது அவசரமாக கவனிக்கப்பட வேண்டும்.
பள்ளி நிர்வாகம், மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் மாநிலக் கல்வியமைச்சின் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால் அங்கு 150 இந்திய மாணவர்கள் தமிழ் கற்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்களைக் கொண்ட பண்டார் ரிங்சிங் இடைநிலைப் பள்ளி, ரெகோ காஜாங் இடைநிலைப் பள்ளி, பந்திங் தெலுக் டத்தோ இடைநிலைப் பள்ளி, பந்திங் தெலுக் பங்லீமா காராங் இடைநிலைப் பள்ளி, பண்டார் பந்திங் இடைநிலைப் பள்ளி ஆகிய 5 பள்ளிகளிலும் தமிழ் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினை நிலவுகிறது.
ஆக சிலாங்கூரில் உள்ள தமிழ் மாணவர்களின் நலன் மற்றும் கல்வியை உறுதிச் செய்யும் வகையில், இந்தப் பிரச்சினையை உடனடியாகத் தீர்ப்பதில் SMC, தமிழ் அறவாரியம், ஆகம அணி, LPS மலேசியா, EWRF மற்றும் MIYC ஆகியவை அடங்கிய அக்கூட்டமைப்பு உறுதியாக உள்ளதாக வெற்றிவேலன் சொன்னார்.
அப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண்பது அவசியம் எனக் குறிப்பிட்ட வெற்றிவேலன், அதிகாரத்துவ காலதாமதத்தால் (Birokrasi) நமது மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று வலியுறுத்தினார்.