
தெஹ்ரான், மார்ச்-30-ஈரானுக்குள் தரைப்படை நடவடிக்கை நடத்தப்பட்டால், அமெரிக்கப் படைகள் “பாரசீக வளைகுடா சுறாக்களுக்கு இரையாகி விடும்” என ஈரான் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானிய இராணுவத் தளபதியும் பேச்சாளருமான Ebrahim Zolfaqari, வீடியோ வாயிலாக அந்த எச்சரிக்கையை விடுத்தார்.
எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ள தெஹ்ரான் தயாராக உள்ளதாகக் கூறிய அவர், ஈரான் மண்ணில் அமெரிக்கப் படைகள் கால் வைத்த மாத்திரத்தில் பதிலடி கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருக்குமென்றார்.
“ஆக்கிரமிப்பு மற்றும் கைப்பற்றும் முயற்சிகள் இறுதியில் அவமானகரமான சிறைபிடித்தல், உடல்கள் துண்டாகுதல் மற்றும் தாக்குதல்காரர்களின் முழுமையான அழிவைத் தவிர வேறெதனையும் தராது என்பதை நிரூபிக்க, இஸ்லாமிய குடியரசின் படை காத்திருக்கிறது” என்று அவர் கூறினார்.
இஸ்ரேல் தரும் அழுத்தத்தைச் சமாளிக்க முடியாமல் அதன் கைப்பாவையாக அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் செயல்படுவதாகவும் Ebrahim குற்றம் சாட்டினார்.
குறிப்பாக, பாலியல் குற்றவாளி Jeffrey Epstein சர்சையில் ட்ரம்ப்பும் சம்பந்தப்பட்டுள்ளதால், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு, கிட்டத்தட்ட அவரை ‘அடகு’ வைத்து விட்டதாவும் Ebrahim சாடினார்.
இதுநாள் வரை வான் தாக்குதல் நடத்தி வந்த வாஷிங்டன், தற்போது ஈரானுக்கு தரைப்படையை அனுப்புவது குறித்து பரிசீலீத்து வருவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின.
வளைகுடாவில் 10,000 தரைப்படையினரை நிலைநிறுத்த திட்டம் வகுக்குகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது; ஆனால் ட்ரம்ப் இன்னும் அதற்கு ஒப்புதல் தரவில்லையாம்.
அது குறித்து கருத்துரைத்த போது Ebrahim இந்த வீடியோவை வெளியிட்டார்.



