
புத்ராஜெயா, ஜனவரி-16 – பிப்ரவரி தொடங்கி ஒவ்வொரு மாதமும் 500 மெட்ரிக் டன் தேங்காய்கள் தீபகற்ப மலேசியாவில் இறக்குமதி செய்யப்படவிருக்கின்றன.
விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் அதனைத் தெரிவித்தது.
சந்தையில் தேய்காய் கையிருப்புக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைத் தீர்க்க, கூட்டரசு விவசாயச் சந்தை அதிகாரத் தரப்பான FAMA ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இந்தோனீசியாவிலிருந்து குறிப்பாக எதிர்வரும் விழாக் காலத்தை முன்னிட்டு மேலும் அதிகமான தேங்காய்களைக் கொள்முதல் செய்வதும் அவற்றிலடங்கும்.
அதே சமயம் புதிய விநியோகிப்பாளர்களுடனும் FAMA பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சு கூறியது.
தவிர, சபா, சரவாக் மாநிலங்களில் தென்னை சாகுபடிக்கான புதிய இடங்களையும் FAMA அடையாளம் கண்டுள்ளது.
தற்காப்பு அமைச்சுக்குச் சொந்தமான நிலங்களில் தென்னை சாகுபடியை மேற்கொள்ளும் ஒத்துழைப்புத் திட்டத்தையும் விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
AgroDefence எனும் அத்திட்டமானது, பயன்படுத்தப்படாத நிலங்களில் தென்னை விளைச்சலை அதிகரிக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும்.
உள்நாட்டு தேங்காய் உற்பத்தியில் அரசு சார் நிறுவனங்களும் தனியார் துறையினரும் பங்கேற்கவும் அமைச்சு ஊக்குவிக்கிறது.
தென்னை சாகுபாடியில் ஆர்வமுள்ள விவசாயிகளும் தொழில்முனைவோரும், தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கு விவசாயத் துறையை நாடலாம்.