
வாஷிங்டன், நவம்பர்-16, உலகில் முதன் முறையாக H5N5 வகை பறவை சளிக் காய்ச்சல் ஒரு மனிதருக்குத் தொற்றியுள்ளதை,
அமெரிக்க சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வாஷிங்டனில் கண்டறியப்பட்ட இந்த நோயாளி, ஏற்கனவே உடல்நலக்குறைவுகள் கொண்ட முதியவர் ஆவார்.
அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
நோயாளி, வீட்டில் வளர்த்த கோழிகள், மற்றும் காட்டுப் பறவைகளுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுவே தொற்றின் மூலமாக இருந்திருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
தற்போது, அதிகாரிகள் நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் கண்காணித்து வருகின்றனர்.
இதற்கு முன் மனிதர்களில் காணப்படாத இந்த H5N5 என்ற புதியப் பிறழ்வை ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.
இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், மனிதர்களுக்கு இடையில் பரவல் எதுவும் இல்லை எனவும், பொது மக்களுக்கு ஆபத்து குறைவாகவே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



