
வாஷிங்டன், மார்ச்-31″அமைதி உடன்பாட்டுக்கு ஈரான் ஒப்புக் கொள்ளவில்லை என்றால், கார்க் தீவு உள்ளிட்ட முக்கிய எண்ணெய் வளங்களை முற்றிலும் அழித்து சின்னாபின்னமாக்கி விடுவோம்” என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அதோடு, உலகின் முக்கியக் கடல் வர்த்தக பாதையான Hormuz நீரிணை உடனடியாகத் திறக்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தெஹ்ரானுக்கு இதுவரை அவர் விடுத்ததிலேயே இதுதான் ஆகக் கடுமையான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
எண்ணெய் வளம் கொழிக்கும் கார்க் தீவு, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 90% பங்கு வகிக்கிறது.
எனவே, இது இராணுவ மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது.
இதனால் தான், மோதல்கள் உருவாகும் போதெல்லாம் இந்த கார்க் தீவும் குறிவைக்கப்படுகிறது.
கடுமையானத் தொனியில் மிரட்டிய அதே நேரத்தில், ஈரானின் புதியத் தலைமையுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ட்ரம்ப் கூறிக் கொண்டார்.
ஒருவேளை அது உண்மை என்றால், அமைதி ஒப்பந்தம் விரைவிலேயே முடிவாகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், பதற்றம் மேலும் அதிகரித்தால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் வட்டார அமைதிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.



