
ஆராவ், மே-8,பெர்லிஸ் மாநிலத்தில் பாலியல் குற்றங்கள் 31 விழுக்காடு அதிகரித்துள்ளன.
2023-ல் 39 சம்பவங்கள் பதிவான நிலையில் கடந்தாண்டு 12 சம்பவங்கள் அதிகரித்ததாக, மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் அப்துல் ஹலிம் கூறினார்.
அவற்றில் 98 விழுக்காட்டு சம்பவங்கள், சந்தேக நபர்கள் மற்றும் வயது குறைந்தவர்களுக்கு இடையில் பரஸ்பர இணக்கத்தின் அடிப்படையில் நிகழ்ந்த பாலியல் உறவாகும்.
இதில் அதிர்ச்சி என்னவென்றால், 12 முதல் 16 வயது பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலர் கருவுற்று குழந்தை பிரசவித்த சம்பவங்களும் உண்டு என, அப்துல் ஹலிம் சொன்னார்.
Facebook, Tik Tok, WhatsApp, Telegram போன்ற சமூக ஊடகங்களில் காதலர்களைத் தேட முற்பட்டு, பலர் இதில் சிக்கிக் கொள்கின்றனர்.
சாதாரணமாக அறிமுகமாகி நெருக்கம் ஏற்பட்டு கடைசியில் பாலியல் உறவு வரை போய் விடுவதாக அவர் கூறினார்.
இந்நிலையில் இது போன்ற குற்றச் செயல்களைத் தடுக்க, பள்ளி அளவில் விழிப்புணர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அப்துல் ஹலிம் மேலும் கூறினார்.