
ஷா ஆலம், செப்டம்பர் 13 – நேற்று சபாக் பெர்நாம் சுங்கை ஆயர் தவார் பகுதியில், சாதாரண நீர் என நினைத்து விஷம் அருந்திய 42 வயதான ஆடவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மரணமடைந்த அந்த ஆடவர் தனது தோட்டத்தில் மரங்களுக்கு மருந்து தெளித்துக் கொண்டிருந்தபோது, குடிநீர்ப் பாட்டிலில் இருந்தது சாதாரண நீர் என நினைத்து தவறுதலாக விஷத்தை அருந்தியுள்ளார் என்று சபாக் பெர்நாம் மாவட்ட காவல் துறைத் தலைவர், யூசுப் அகமட் (Md Yusof Ahmad) தெரிவித்தார்.
பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்கு அந்நபரின் உடல் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அறியப்படுகின்றது.
இந்நிலையில் பொதுமக்கள் அதிகாரபூர்வமற்ற தகவல்களைப் பரப்பாமல் விசாரணை அதிகாரிகள் தங்களின் வேலைகளைச் செய்ய இடமளிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டனர்.



