
குவாந்தான், ஏப்ரல்-2-பஹாங் மாநில அரசாங்கம் கேமரன் மலையில் காய்கறி மொத்த விற்பனை மையமொன்றை அமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
இம்முயற்சி, இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை குறைத்து, விவசாயிகள் நேரடியாக சந்தையில் விற்கும் வாய்ப்பை வழங்கும் என, பயனீட்டாளர் விவகாரம் மற்றும் மனிதவள துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Sim Chon Siang தெரிவித்தார்.
சில காய்கறிகளுக்கு விவசாயிகள் ஒரு கிலோவுக்கு 20 சென் மட்டுமே இலாபம் பெறுகின்றனர்.
முன்பு சுமார் 15 வகை காய்கறிகளுக்கு RM1 வரை இலாபம் பெற்ற நிலையில் இப்போது 2 வகைகள் மட்டுமே அந்த விலையை அடைகின்றன.
விலைகள் தற்போது செலாயாங் மொத்தச் சந்தையால் நிர்ணயிக்கப்படுவதை அவர் சுட்டிக் காட்டினார்.
இவ்வேளையில் விவசாயத் தோட்டங்களில் குறைந்த விலைக்கு விற்கப்படும் தக்காளி சில்லறை விலையில், ஒரு கிலோக்கு RM6.50 வரை விற்கப்படுவதாக அவர் சொன்னார்.
எனவே இப்புதிய மையம், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க உதவும் என்றார் அவர்.
இந்த மொத்த விற்பனை மையம், கேமரன் மலை விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றும் முக்கிய முயற்சியாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.



