
கோலாலம்பூர், அக்டோபர்- 15,
மலேசியா விரைவில் அனைத்து சமூக ஊடக தளங்களிலும் மின்னணு Know-Your-Customer (e-KYC) அடையாள சரிபார்ப்பு முறைகளை செயல்படுத்த வேண்டும் என்று கோரவிருக்கிறது. இதன் மூலம் 13 வயதுக்குட்பட்ட பயனர்கள் கணக்குகளை வைத்திருக்காமல் இருப்பதை உறுதிசெய்ய முடியும். ஆன்லைனில் இருந்து சிறார்களை பாதுகாப்பதையும், தளங்களால் நிர்ணயிக்கப்பட்ட சமுக வழிகாட்டுதல்கள் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் பாமி பாட்ஷில் ( Fahmi Fadzil ) கூறினார்.
கடந்த மாதம் சமூக ஊடக தளங்களின் பிரதிநிதிகளை சந்தித்தபோது , மலேசியா அடையாள சரிபார்ப்பை கட்டாயமாக்கும் என்பதோடு, 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் கணக்குகள் வைத்திருப்பதைத் தடுக்கும் என்பதை தெளிவுபடுத்திய விவரங்களையும் பாமி சுட்டிக்காட்டினார். இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு அமைச்சரவையில் சரியான காலக்கெடுவை தாம் முன்வைக்கவிருப்பதாக அவர் கூறினார். இந்தத் தேவையை செயல்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் அடுத்த வாரம் சமூக ஊடக நிறுவனங்களுடன் ஒரு சந்திப்பை நடத்தும் என்றும் பாமி தெரிவித்தார்.



