
கோலாலம்பூர், ஜூன்-25 – மீன் வியாபாரியான தாய் கெங்கம்மாள், முன்னாள் தீயணைப்பு வண்டி ஓட்டுநரான தந்தை மோகன் குமாரப்பா – இவர்களது மகள் கௌரி, தற்போது ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக மருத்துவ பட்டதாரி.
வறுமையில் ஒரு பெண் கல்விக் கனவை எட்ட முடியாதா? வாழ்வில் சாதித்து காட்ட முடியாதா?
கல்வி என்ற ஒரே சொத்தை தன் மகளுக்கு கொடுக்க நினைத்து பல நிதிச் சவால்களுக்கு மத்தியில் பாடுபட்டனர் பினாங்கைச் சேர்ந்த இவரது பெற்றோர். மகளும் படித்துக் கொண்டே பல பகுதி தொழில்களைச் செய்து நிதி சேர்த்தார். சில நல்லுங்களும் உதவின. அதன் பயன், சமூக உருமாற்றத்திற்கான அடையாளமாக இன்று பெருமைபடும் மருத்துவராகியுள்ளார் கெளரி.
தன் கனவுக்கு, தான் தானே பொறுப்பு. ஆக தானும் முழு உழைப்பை போட வேண்டும் என்றெண்ணிய கெளரியும் படிப்புக்கு மத்தியில், பெற்றோரின் சுமையை குறைக்க மலர் அலங்காரம், உணவு விநியோகம், கிராப் ஓட்டுதல் என பல்வேறான பகுதி நேர வேலைகளைச் செய்து பணம் சேர்த்துள்ளார்.
இப்படி இன்று, 31-ஆவது வயதில், ம.இ.காவின் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திலிருந்து MBBS பட்டம் பெற்றிருக்கிறார் இவர்.
ஒரு மருத்துவராக மட்டுமல்லாமல், பொது மருத்துவ விழிப்புணர்வை பரப்பும் தொண்டூழியராகவும், கிராமப்புற மாணவர்களுக்கு உந்துதலாகவும் கௌரி விளங்குகிறார்.
தன்னுடைய வளர்ச்சிக்கு பெற்றோரோடு சேர்த்து, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வேந்தர் டான் ஶ்ரீ விக்கினேஸ்வரனுக்கும் தக்க சமயத்தில், விக்கினேஸ்வரனின் தலைமைத்துவத்தின் கீழ் தனக்கு MIED உபகாராச் சம்பளம் கிடைக்கப்பெற்றதற்கும் நன்றி கூறுகிறார் இவர்.
இத்தருணத்தில் தன் கல்விக்காக உறுதுணையாக இருந்த பிறரையும் நினைவுக்கூறுகிறார் இவர்.
வறுமை, வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான நிரந்தர தடையாக இருக்க முடியாது. தடைகளைத் தகர்த்தெறிய மனத்திடத்தோடு ஒருவர் புறப்பட்டுவிட்டால் காரியங்கள் கைக்கூடும். அதற்கு ஓர் உதாரண “சிங்கப் பெண்”தான் AIMST பட்டதாரியான மருத்துவர் கெளிரி. நம் சமூகத்தில் மேலும் பலர் கல்வி வழி வாழ்வில் முன்னேறுவதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இவர். நாமும் வாழ்த்துவோம்