
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் பட்டாசு கடை வெடிப்பு: 8 பேர் பலி
சீனா, பிப்ரவரி-16 —
சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் பட்டாசு விற்பனை கடையில் ஏற்பட்ட வெடிப்பில் 8 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
மதியம் சுமார் 2.30 மணியளவில், பட்டாசுகளை தவறாக பயன்படுத்தியதால் அருகிலிருந்த கடையில் வெடிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவத்திற்குப் பிறகு மீட்பு அணிகள், தீயணைப்பு படை, போலீஸ் மற்றும் மருத்துவ குழுக்கள் விரைந்து செயல்பட்டன. வெடிப்பால் ஏற்பட்ட தீ மாலை 4 மணியளவில் அணைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2 பேருக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. சம்பவத்துக்கு காரணமானதாக சந்தேகிக்கப்படும் நபர்களைத் தடுப்புக் காவலில் வைத்து மேல் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.
சீன புத்தாண்டு காலத்தில் பட்டாசு பயன்பாடு அதிகரிக்கும் நிலையில், பட்டாசு கடைகள் அருகில் ஆபத்தான செயல்களை தவிர்க்குமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



