வாஷிங்டன், டிசம்பர்-18 – 6 மாதங்களுக்கும் மேலாக அனைத்துலக விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவது மீண்டும் தாமதமடைந்துள்ளது.
சுனிதாவும், சக அமெரிக்க விண்வெளி வீரரான புட்ச் வில்மோரும் (Butch Wilmore) SpaceX Crew Dragon விண்கலம் மூலம் வரும் பிப்ரவரியில் பூமி திரும்ப முன்னதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஆகக் கடைசி தகவலின் படி, குறைந்தது 2025 மார்ச் வரை இருவரும் விண்வெளியிலேயே தங்கியிருப்பர்.
சில தொழில்நுட்பக் கோளாறும், புதிய SpaceX Crew Dragon விண்கலத்தைத் தயார் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதமுமே அதற்குக் காரணம்.
வேகமா பாதுகாப்பா என வரும் போது, பாதுகாப்பு தான் முக்கியம் எனக் கருதி, அவர்களை பூமிக்குக் கொண்டு வருவதைத் தாமதப்படுத்த முடிவெடுக்கப்பட்டதாக நாசா விளக்கியது.
இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் வெறும் ஒரு வார கால பயணமாக ஜூன் ஐந்தாம் தேதி புட்ச் வில்மோருடன் விண்வெளி பயணமானார்.
ஆனால் அவர்கள் சென்ற Starliner விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால், இருவரும் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
கோளாறை சரிசெய்ய மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால், இருவரையும் பூமிக்கு அழைத்து வரும் கடைசி கடைசியாக இந்த Space X நிறுவனத்திடம் நாசா பொறுப்பை ஒப்படைத்துள்ளது.