
இஸ்லாமாபாத், நவம்பர்-15,பாகிஸ்தானின் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று தனது செய்திக் கட்டுரையில் ChatGPT-யின் ‘prompt’ தகவலை நீக்க மறந்து, பெரும் அவமானத்தைச் சந்தித்துள்ளது.
கட்டுரையின் கடைசியில் “ஒருவேளை நீங்கள் விரும்பினால், என்னால், இந்தச் செய்தியின் முதல் பாராவை இன்னும் சிறப்பாக மாற்றியமைத்துக் கொடுக்க முடியும்” என அந்த ChatGPT தகவல் இடம்பெற்றுள்ளது.
இதனால் AI உதவியுடனேயே அக்கட்டுரை எழுதப்பட்டிருப்பது வெட்டவெளிச்சமானது.
இதை கண்ட வலைத்தளவாசிகள், செய்தித்தாளின் அந்தக் குறிப்பிட்ட பகுதியை வட்டமிட்டு வைரலாக்கியதோடு, அந்நாளிதழ் நிறுவனத்தை கேலி செய்து வருகின்றனர்.
ChatGPT உதவியுடன் கட்டுரையை எழுதியவரும், அதனை சரிபார்த்தவரும், நாளிதழ் அச்சுக்குப் போவதற்கு முன் ஒரு தடவை சரிபார்த்திருக்கலாம்…அப்படி செய்திருந்தால் இந்த அவமானத்தைத் தவிர்த்திருக்கலாம் என பலர் நகைச்சுவையாக விமர்சித்தனர்.
மேலும் சிலர், இதை “பெரிய பிழை” எனக் கூறி, செய்தித்தாளின் நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பினர்.
என்னதான் AI தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி கண்டிருந்தாலும், அது உருவாக்கிய உள்ளடக்கத்தை மனிதர்கள் ஒருதடவை சரிபார்க்க வேண்டிய அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துகிறது.



