
போஸ்டன், மே-24 – உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க தடை விதிக்கும் அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்தின் முயற்சியை, அமெரிக்க நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது.
டிரம்பின் கொள்கைகளுக்கு ஏற்ற வகையில் கல்வித் துறையின் நடைமுறைகளும் இருப்பதை உறுதிச் செய்யும் நோக்கில், வெள்ளை மாளிகை முன்னதாக அம்முயற்சியில் இறங்கியது.
இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்களை அனுமதிக்கும் தங்களது அதிகாரத்தை இரத்துச் செய்யும் எந்த நடவடிக்கையும், அமெரிக்க அரசியலமைப்பு மற்றும் பிற கூட்டாட்சி சட்டங்களின் அப்பட்டமான மீறல் என, ஹாவர்ட் பல்கலைக்கழகம் போஸ்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இது பல்கலைக்கழகம் மற்றும் 7,000 க்கும் மேற்பட்ட விசா வைத்திருப்பவர்களுக்கு உடனடி மற்றும் பெரிய விளைவை ஏற்படுத்துமென்றும் அது சுட்டிக் காட்டியது.
ஒரே கையெழுத்தில் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் கால்வாசி மாணவர்களின் எதிர்காலத்தில் டிரம்ப் நிர்வாகம் கை வைத்து விட்டது.
அனைத்துலக மாணவர்கள் இல்லையென்றால், 389 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஹாவர்ட் இனி ஹாவர்டாக இருக்காது; அதன் தனித்தன்மை போய்விடுமென பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.
வழக்கை செவிமெடுத்த நீதிபதி, டிரம்ப்பின் புதியக் கொள்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.
ஹார்வர்ட் மீதான டிரம்பின் அழுத்தம், பல்கலைக்கழகங்கள், சட்ட நிறுவனங்கள், செய்தி ஊடகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் சுதந்திரத்தை மதிக்கும் பிற நிறுவனங்களை, தனது கொள்கைகளுடன் இணைக்க கட்டாயப்படுத்தும் குடியரசுக் கட்சியின் பரந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் பங்கேற்ற ஆனால் எந்த குற்றமும் செய்யாத வெளிநாட்டு மாணவர்களை நாடு கடத்தும் முயற்சி, டிரம்பை எதிர்த்த வழக்கறிஞர்களைப் பணியமர்த்தும் சட்ட நிறுவனங்களை பழிவாங்குதல் மற்றும் தனக்குப் பிடிக்காத குடிநுழைவுத் தீர்ப்புக்காக நீதிபதியையே பதவி நீக்கம் செய்ய டிரம்ப் பரிந்துரைத்தது ஆகியவை அவற்றிலடங்கும்.