Latestமலேசியா

தனது கேலிச்சித்திரத்திற்கு தீவைத்த மாணவர்களை யு.எம்.எஸ் சிலிருந்து நீக்குவதற்கு பிரதமர் விரும்பவில்லை

கோலாலம்பூர், ஜூன் 24 – வார இறுதியில் கோத்தா கினபாலுவில் ஊழலுக்கு எதிரான பேரணியின்போது தனது கேலிச் சித்திரத்தை எரித்ததில் சம்பந்தப்பட்ட மாணவர்களை நீக்க வேண்டாம் என UMS எனப்படும் மலேசிய சபா பல்கலைக்கழகத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டதாக உயர்க்கல்வி அமைச்சர் ஸம்ரி அப்துல் காடிர் (Zamri Abdul Kadir) தெரிவித்தார்.

பேரணியில் பங்கேற்றதாக அடையாளம் காணப்பட்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 13 மாணவர்கள் 2012 ஆம் ஆண்டின் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக கல்லூரிகள் சட்டத்தின் கீழ் இடைநீக்கம் அல்லது வெளியேற்றம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று மலேசிய சபா பல்கலைக்கழகத்தின் உதவி துணைவேந்தர் காசிம் மன்சூர் கூறியிருந்தார்.

சம்பந்தப்பட்ட மாணவர்கள் தவறு செய்திருந்தாலும் அவர்களின் எதிர்காலமும் கல்வியும் மிக முக்கியமானவை என்பதோடு அவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என பிரதமர் விரும்புகிறார் என்று ஸம்ரி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தை விசாரித்து மாணவர்கள் மீது எடுக்க வேண்டிய பொருத்தமான நடவடிக்கையை தீர்மானிக்க கல்வியாளர்கள் அடங்கிய ஒரு ஒழுங்கு நடவடிக்கைக் குழு விரைவில் அமைக்கப்படும் என்று காசிம் கூறியிருந்தார். ஞாயிற்றுக்கிழமை பேரணியின் போது நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு அழைக்கும்.

13 பேரில், இருவர் மட்டுமே கேலிச்சித்திரத்தை எரிப்பதில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பு உயர்கல்வி அமைச்சின் சட்ட ஆலோசகரிடமிருந்து சட்ட ஆலோசனை பெறப்படும் என்றும் காசிம் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!