
கோலாலாம்பூர், மார்ச்-18-இன-மத துவேச குற்றச்சாட்டுக்குட்பட்ட நபரான தமிம் டாஹ்ரியை போலீஸார் உடனடியாக தாயகம் கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பதவி அல்லது அந்தஸ்து எதுவாக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் பொறுப்பேற்க வேண்டியது அவசியமாகும்.
சட்டத்தின் மாண்பு, பொறுப்பு, மற்றும் நீதி மீதான மரியாதை நிலைநாட்டப் பட வேண்டுமென வேண்டியது முக்கியம் என அவர் குறிப்பிட்டார்.
நீதியில் தாமதம் ஏற்படுவது, நீதி மறுக்கப்படுவதற்கு சமம் எனவும் அவர் எச்சரித்தார்.
2009-ஆம் ஆண்டு தனது மகளை முன்னாள் கணவரிடம் பறிகொடுத்த தாய் இந்திரா காந்தியின் 16 ஆண்டுகால போராட்டத்தை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட லிங்கேஷ், சட்ட தாமதம் எவ்வளவு பெரியப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கு அதுவே சாட்சி என்றார்.
எனவே, இதேபோன்ற இன்னொரு பிரச்னை மீண்டும் நீண்டகாலத்திற்கு தொடரக் கூடாது என அவர் தெரிவித்தார்.
சம்ரி வினோத், அருண் துரைசாமி, மகேந்திர பூபதி என 3 நபர்கள் மீது இன-மத தூண்டல்கள் தொடர்பில் நேற்று நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டது.
நான்காவது நபராக அக்குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க வேண்டிய தமிம் டாஹ்ரி, திடீரென சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கெடா, லங்காவியில் கோவிலொன்றில் திரிசூலத்தை காலால் மிதித்ததாக அவர் மீது நேற்று கொண்டு வரப்படவிருந்த குற்றச்சாட்டு மே மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்தே லிங்கேஷ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.



