Latestமலேசியா

’தவறான நடத்தையால்’ முன்னாள் ஆசிரியரின் பணிக்கொடையிலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட RM58,000 திருப்பித் தர உத்தரவு

புத்ராஜெயா, ஜூன்-25 – இடைநிலைப் பள்ளி முன்னாள் ஆசிரியர் ஒருவர் பணியில் இருந்தபோது 192 நாட்கள் பள்ளிக்கு வராமல் இருந்ததால், gratuity எனப்படும் அவரது பணிக்கொடையிலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட சுமார் 58,000 ரிங்கிட்டை அரசாங்கம் அவருக்குத் திருப்பித் தர வேண்டும்.

அரசாங்கத்தின் இறுதி மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏகமனதாக அத்தீர்ப்பை வழங்கியது.

N ஜேம்ஸ் அருள்செல்வம் எனும் அவ்வாசிரியர், பொதுச் சேவை ஊழியர்களின் நடத்தை மற்றும் ஒழுக்கம் தொடர்பான விதிமுறைகளின் கீழ் தவறேதும் இழைக்கவில்லை.

எனவே, அருள்செல்வத்திற்கு சாதகமாக இதற்கு முன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததில் தவறில்லை என, நீதிபதி சுபாங் லியான் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.

தவிர, குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க பிரதிவாதிக்கு காரணம் கோரும் கடிதம் வழங்கப்படவில்லை என்பதால், செலவுத் தொகையாக 10,000 ரிங்கிட்டை அரசாங்கம் செலுத்த வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டது.

சிலாங்கூர் செமிஞ்சேவில் உள்ள SM Engku Husain பள்ளியில் கடைசியாகப் பணியாற்றிய 64 வயதான அருள்செல்வத்திற்கு, மருத்துவக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு, அவரது உடல்நலக் குறைவு காரணமாக ஒரு பிரத்தியேக சூழ்நிலையாக அவர் வகைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், 2017-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அவருக்கு வாரத்தில் 2 அல்லது 3 நாட்களுக்கு 6 பாட நேரங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன, அதாவது அந்த நாட்களில் மட்டுமே அவர் பள்ளியில் இருக்க வேண்டியிருந்தது.

பின்னர் அருள்செல்வம் 2018-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் விருப்ப அடிப்படையில் ஓய்வு பெற முடிவுச் செய்தார்.

இருப்பினும், பள்ளியின் புதிய முதல்வர், அருள்செல்வம் 192 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை என்று கூறி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கினார்.

அரசாங்கம், பின்னர் கல்வி அமைச்சு மூலம், அருள்செல்வம் பள்ளி வராத நாட்களுக்கு அவரது பணிக்கொடையிலிருந்து 58,004.90 ரிங்கிட்டை பிடித்தம் செய்தது.

இதை எதிர்த்து வழக்கு தொடுத்த அருள்செல்வம், பள்ளிக்கு வராத நாட்கள் எனக் கூறப்பட்ட காலக்கட்டத்தில் தாம் உண்மையில் பள்ளிக்கு வந்ததாகவும், ஆனால் punch card அடிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

செஷன்ஸ் நீதிமன்றம் அவரது வழக்கை தள்ளுபடி செய்த நிலையில், பின்னர் உயர்நீதிமன்றம் அம்மனுவை ஏற்றுகொண்டு, பிடித்தம் செய்யப்பட்ட தொகையை அரசாங்கம் திருப்பித் தர உத்தரவிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!